மாண்புற வாழ்க

- ராஜாஜி ராஜகோபாலன்

Wednesday, March 25, 2009

முதல் வணக்கம்

நேரம் மனதை அள்ளும் மாலை. கிராமமோ நகரமோ அல்லாத ஒரு சூழலில் ஒரு ஆற்றங்கரையில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். எங்கும் அமைதி உங்கள் மனதைத் தவிர. திடீரென ஒரு தேவதூதன் உங்கள்முன் தோன்றி, "நீ விரும்பியவற்றில் மூன்றைக் கேள் தருகிறேன்" என்று கூறி உங்களை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளாக்கப்போவதில்லை. ஏனெனில் இது நிகழ்காலம்.
நமது தலைவிதியை நிர்ணயிக்கும் உரிமையும் சக்தியும் நம்மிடமேயுள்ளன. நமக்கு முன்னால் உள்ள காரியம் இவற்றுக்கு அப்பாற்பட்டதல்ல; அதனாலுண்டாகும் மனச்சுமையும் பாதிப்பும் எம்மால் பொறுக்கக் கூடியவையே. எமது இலட்சியத்தில் நம்பிக்கையும் அக்காரியத்தைச் செய்வோம் என்ற அசைக்க முடியாத மனவுறுதியும் நம்மிடம் இருக்கும்வரை வெற்றியை எவரும் எம்மிடமிருந்து பறித்துவிடமுடியாது.

இங்கு செய்தியென்னவெனில் நீங்கள் தேடிவந்த அழகும் அமைதியும் உங்களைச்சுற்றி எங்குமே நிறைந்திருக்கிறது. ஆனால் எப்படி நீங்கள் தேடும் "அந்த" அமைதியும் மகிழ்வும் வாழ்வும் வளமும் உங்களை வந்தடையப் போகின்றன? உங்கள் தேடுதல் தொடரும்வரை, தேடியதை அடையும்வரை துவண்டுவிடாதீர்கள். விடாமுயறசியுள்ளவர்கள் வாழ்க்கையில் தோற்றே போனார்கள் என்ற சரித்திரமேயில்லை.

வாழ்வியலையும் தனிமனித மேம்பாட்டையும் (Life Management and Personal Development) பற்றிய ஆய்வில் நான் நீண்டகாலம் ஈடுபட்டிருந்தேன். எனது தொழில் சார்ந்த பயிற்சியும் தனிப்பட்ட முயற்சியும் நல்ல நண்பர்களின் தொடர்பும் இந்த ஆய்வுக்குத் தொடர்பான நூல்களைக் கற்கவும் கலந்துரையாடல்களில் மனம் செலுத்தவும் வாய்ப்புகளைத் தேடித்தந்தன. எனது சொந்த அனுபவங்களும் இந்த ஆய்வுகளுக்கும் பயிற்சிகளுக்கும் துணை நிற்கவே இதில் ஆழ்ந்த பற்றுடையவனாகி இத்துறையில் நன்றாய் விதந்துரைக்கப்பட்ட வழிவகைகளைத் தமிழில் வெளியிட ஒரு வடிகாலைத் தேடிக் கொண்டிருந்தேன். எனது நண்பர்களின் தூண்டுதலும் கணனித் துறையிலான உதவிகளும் எனது எண்ணங்களை இங்கே எழுத்துருவாக்க உதவின. அவர்களுக்கு என் நன்றிகள். இந்தத் தினத்திலிருந்து உங்களுடன் உறவாடப் போகின்றேன். இதன் வளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் உங்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பைத் தருவீர்களென நம்புகிறேன்.
நன்றி. ராஜாஜி

About Me