மாண்புற வாழ்க

- ராஜாஜி ராஜகோபாலன்

Wednesday, April 8, 2009

கவலை கொள்ளாதே மனமே

எனது கவலைகளை நான் மீள நினைக்கும்போது ஒரு முதியவனின் கதை நினைவுக்கு வருகிறது. அவன் இறக்கும் வேளையில் கூறினான்: "என் வாழ்க்கையில் எண்ணற்ற பிரச்சனைகள்; அவற்றில் பெரும்பாலானவை ஒருபோதுமே நிகழ்ந்ததில்லை." கவலை மனதின் பெரும்பாலான சக்திகளைப் பலயீனப்படுதிவிடுகிறது என்பதை அறிவீர்களா? இதுவே காலப்போக்கில் உங்கள் ஆத்மாவை ஒடுக்கிவிடும் அபாயத்தை உண்டாக்குகிறது.

சிலர் பழைமையான ஒரே விஷயங்களையே மீண்டும் மீண்டும் சிந்திதுக் கொண்டிருக்கிறார்கள். இருக்கிற நல்லவற்றின்மீது மனதைச் செலுத்துவதை விடுத்து இல்லாத கவலைகளை எண்ணிப் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

சிலர் கனியாமற்போன காதலை நினைத்துக் கதறிக்கொண்டிருகிறார்கள். சிலர் கடன் தொல்லைகளைப்பற்றிப் பேசியே தமது கசப்பான நினைவுகளை இரைமீட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் உடைந்துபோன உறவுகளையும் காணாமற்போன பொருட்களையும் அனுபவிக்க மறந்த இளமைக் காலத்தையும் கணவன் அல்லது மனைவி மீதுள்ள சந்தேகத்தையும் திரும்பத் திரும்ப நினைத்துத் தம்மைத்தாமே சித்திரவதை செய்துகொள்கிறார்கள். இன்னும் மோசமான ஆட்கள் தம்மை இழிவாக நடத்தும் அலுவலக முகாமையாளரையும் 401 இல் குறுக்கே தனது காரைச்செலுத்திக் குலை நடுங்கவைத்த முகந்தெரியாத ஆளையும் தனது வியாபாரம் கெட்டுப்போனதற்குத் தன்னைத் தவிர மிச்சமுள்ள எல்லாரையும் திட்டுவதிலேயே தமது பொன்னான வேளைகளை வீணடிக்கிறார்கள்.

இவர்கள் இன்றைய காலத்தின் எசமானர்கள் அல்லர், கடந்தகாலத்தின் கைதிகள்; தங்கள் மனத்தைக் கவலைகளென்னும் காளான்கள் நிறைந்த சிறைக் கூடமாக்கி அதனுள்ளே நிரந்தரமாகத் தம்மைப் பூட்டிக்கொண்டார்கள். அதுமட்டுமன்றி, தமது வாழ்வின் ஒவ்வொரு பொழுதும் எவ்வளவு உன்னதமானது என்பதையோ கவலைகள் இப்பொழுதுகளை அநியாயமாகக் கொள்ளைகொண்டுபோகின்றன என்பதையோ அறியாதிருக்கிறார்கள்.

கவலையில் மூழ்குவதன்மூலம் தனது வாழ்வில் அடையவேண்டுமென்று
நினைக்கின்ற அத்தனையையும் சிருஷ்டித்து வழங்கும் வல்லமைவாய்ந்த மனதின் எல்லையற்ற சக்திகளை இவர்கள் மழுங்கடித்துவிடுகிறார்கள். இவர்கள் தமது மனவோட்டங்களை மேற்பார்வை பார்த்து முகாமைப்படுத்துவதன் மூலம் தமது வாழ்க்கையையே மாற்றியமைக்க முடியும் என்பதனை முதலில் அறிந்துகொள்ளவேண்டும்.

உங்கள் மனதில் கவலைகள் சூழும்போது என்ன உண்டாகிறது என்பதைப் பாருங்கள். அவை எம் மனதில் இயற்கையாகவே ஊற்றெடுக்கும் அறிவையும் ஆக்கசக்தியையும் இல்லையென்று ஆக்கிவிடுகின்றன. உங்கள் மனம் காற்றிழந்த பந்துபோல் விரைவில் சோர்ந்து களைப்படைந்து விடுகிறது.

பெரும்பாலானோர் தமது சிந்தனைகளின் நோக்கையும் போக்கையும் துப்பரவாக அறியாமலிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல சிறப்பான சிந்தனைகள் சிறப்பான வாழ்வுக்கு வழிசமைக்கின்றன என்பதையே தெரியாதிருக்கிறார்கள். இது பலவீனமுள்ள மனதின் பிரதிபலிப்பாகும். பலவீனமுள்ள மனம் பலவீனமான சிந்தனைகளையே ஊக்குவிக்கின்றன. கவலைகளே இவற்றில் முதலிடம் வகிக்கின்றன.

வலுவுள்ளதும் ஒழுங்காற்றப்பட்டதுமான மனம் உண்மையில் எண்ணற்ற அற்புதங்களை ஏற்படுத்தும். எவரும் இவற்றை அன்றாடப் பயிற்சிமூலம் அறுவடைசெய்து கொள்ளலாம். உங்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க விரும்புவீர்க்களேயானால் உங்கள் சிந்தனைகளின் நோக்கையும் போக்கையும் பற்றி முதலில் நிறையக் கவனமெடுங்கள்.

மனமென்னும் மீகாமன்


இயற்கை உங்களைப் படைத்தது ஆனால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை நீங்கள்தான் படைக்க வேண்டும். இதற்கு வேண்டிய உறுதுணைகள்யாவும் உங்களுடன் ஏற்கனவே ஒருங்கிணைக்கப்பட்டிடுக்கின் றன. உங்கள் ஒரே வேலை என்னவெனில் மகிச்சிக்கான அம் மூலாதாரங்களைக் கண்டுபிடிப்பதும் அம்மகிழ்ச்சி மூலம் உங்கள் வாழ்வை ஒளிபெறச்செய்வதுமாகும்.

மனம்தான் இயற்கை மனிதனுக்கு அளித்த மாபெரும் பரிசு. நம்மில் பலர் தமது மனதின் அளப்பரிய சக்தியை அறியாதிருக்கிறார்கள். இவர்கள் அவசியமற்ற எண்ணங்களையும் கவலைகளையும் தம் மனதில் ஓடவிடுவதன்மூலம் அது ஆற்றக்கூடிய எண்ணற்ற வித்தைகளை நிகழாமல் தடுத்துவிடுகிறார்கள். இதனால் மன, உடல் ரீதியாக எதனை நிறைவேற்றவேண்டுமேன விழைகிறோமோ அதனை இல்லையென்று ஆக்கிவிடுகிறார்கள்.

உங்களுக்குத் தெரியுமா உங்கள் மனம் ஒரு அற்புதமான சேவகன் என்பதை? அதுமட்டுமல்ல அது மிக மோசமான எசமானும் கூட.

நீங்கள் எதிரிடையாகச் சிந்திக்கிற ஆளாகவிருப்பின் இந் நிலைவரம் உங்கள் மனதைப் முறைப்படி பண்படுத்த அக்கறை எடுக்காததினாலும் நல்லவற்றின்மீது கவனம் செலுத்தும் வகையில் அதனைப் பழக்கப்படுத்த நேரம் செலவழிக்காததினாலும் ஏற்பட்டதென அறிந்துகொள்ளுங்கள். உங்கள் உடம்பிலுள்ள தசைகளைப்போன்றதெ உங்கள் மனமும். தசைகளைப் பண்படுத்த நிறையப் பயிற்சி செய்கிறீர்கள். மனதைப் பண்படுத்தப் பயிற்சி எதையேனும் செய்திருக்கிறீர்களா?

முறையான பயிற்சியற்ற மனம் படிப்படியாகப் பலமிழந்துவிடுகிறது . பயிற்சியின் மூலம் அதற்கு ஒளியூட்டுவீர்களேயானால் விரைவில் அது பல அற்புதங்களை நிகழ்த்துவதைக் கண்டு பிரமித்துப்போவீர்கள். ஆகவே உங்கள் மனம் என்னும் கப்பலுக்கு நீங்களே மீகாமன் ஆதல் வேண்டும். அதை வழி நடத்துவதற்குப் புதிதாக எதையும் நீங்கள் கண்டுபிடிககத் தேவையில்லை.

முதற்கண் உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை நன்கு தீர்மானித்துக்கொள்ளுங்கள். உங்கள் கவனம் உன்னதமான நோக்கத்தினால் அல்லது அதிவிசேடமான வேலைத் திட்டத்தினால் ஈர்க்கப்படும்போது உங்களின் முழுச் சிந்தனைகளும் தமது கட்டுகளை அறுத்துக் கோண்டு வெளிவர ஆரம்பிக்கின்றன; உங்கள் மனம் விதிக்கப்பட்ட எல்லைகளைப் புலன்களால் வசியமாக்குகிறது; உங்கள் உள்ளுணர்வு எல்லாத் திசைகளையும் நோக்கிச் சிறகடிக்கிறது; அத்துடன் நீங்கள் புதியதும் பெரியதும் அற்புதமானதுமான உலகில் சஞ்சரிப்பதைப் படிப்படியாக உணரத் துவங்குவீர்கள். உங்களுக்குள் உத்வேகமும் திறமைகளும் உயிர்ப்பெறுதலும் நீங்கள் முன்னெப்போதும் கனவுகூடக் கண்டிருக்காத மாபெரும் மனிதனாகப் புத்துயிரெடுப்பதை உணர ஆரம்பிப்பீர்கள். உங்கள் மன நலத்தைப் பேணுவதே இம்மாபெரும் மாற்றத்திற்கான முதற் செயற் பாடாகும்.

உங்களைச் சுற்றி நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நேர் வழியில் அணுகிச் சக்தியூட்டி உங்கள் மனதை மென்மைப் படுத்த ஆரம்பிக்கும்போதெ ஏலவேயுள்ள கவலைகளை ஒழித்துவிடுவீர்கள்; கடந்த காலத்தின் கைதியாக இருப்பதைத் தவிர்த்துக்கொள்வீர்கள்; உங்கள் எதிர்க்காலத்தைக் கட்டியெழுப்பும் சிற்பியாவீர்கள்.

உங்கள் அன்றாட வாழ்வில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டிய அர்த்தமுள்ள சங்கதிகளான ஆரோக்கியமான உணவு, அன்றாட உடற்பயிற்சி மற்றும் ஒழுங்கான வாழ்க்கைமுறை ஆகியவை உங்களின் உன்னதமான வாழ்க்கைக்கு அவசியமானவையே. ஆயினும் வலுவான நற்பண்பு, மனவுறுதியை மேம்படுத்தும் திறன், என்றும் தளராத ஊக்கம் ஆகியவையும் இவற்றின் மேலாக உங்கள் மனதைப் பண்படுத்தும் திறனும் சேர்ந்துகொண்டால் உங்களை எங்கும் முன்னிலைப்படுத்தத் தேவையான ஆயுதங்களைத் தரித்துக்கொண்டவர்களாவீர்கள்.

சுதந்திரம் என்பது உம்மையில் என்ன? நீங்கள் நினைக்கும், நன்கு அனுபவிக்கும் எல்லாச் சுதந்திரங்களும் உண்மை யான சுதந்திரம் ஆகிவிடா. கட்டறுத்துத் திரியும் விசர் நாய் போல அலைக்கழியும் உங்கள் மனதிலிருந்து பெறும் சுதந்திரம்தான் உண்மையான சுதந்திரமாகும்.

இந்தப் பூமியிலுள்ள ஒவ்வொரு உயிரும் பொருளும் தனக்கென ஒரு ஆத்மாவைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆத்மாவும் ஒருங்கிணையும்போது அவை அகிலத்தின் ஆத்மா ஆகின்றன. உங்கள் மனதுக்கும் உணர்வுக்கும் நீங்கள் உணவூட்டும்போது உண்மையிலேயே அகிலத்தின் ஆத்மாவுக்கு உணவூட்டுகிறீர்கள். நீங்கள் சீராக வழிச் செல்லும்போது உங்களைச் சுற்றியுள்ள எல்லார் வாழ்வையும் சீராக்குகிறீர்க்கள். மேலும் உங்கள் கனவுகளின் திக்கை நோக்கி நம்பிக்கையுடன் முன்னேறுவதற்கான ஊககமெடுக்கும்போது அகிலத்தின் சக்தியையே உங்கள்பால் கவருவதற்கு வழிசமைக்கிறீர்கள்.

About Me