திறமான புத்தகங்களைவிடத் திறமான நண்பர்கள் கிடையவே கிடையாது |
நம்மவர்களில் பெரும்பாலானோர் நூலகப்பக்கம் போவதே இல்லை. அதற்கு நிறையவே காரணங்கள் சொல்வார்க்கள். இளைஞர்களின் உலகம் இதற்கு முற்றிலும் மாறானது.
ஒவ்வொரு முறையும் நான் ஒரு நூலகத்தினுள் நுழையும் போது ஒரு கோயிலுக்குள் நுழைவதுபோன்ற உணர்வைப் பெறுவேன். இவ்விரு இடங்களும் உள்ளும் புறமும் பரிசுத்தமானவை என்பது மடடுமல்ல என்னை உள்ளும் புறமும் பரிசுத்தமாக்குபவை. அங்கே தெய்வங்களென்றால் இங்கே புத்தகங்கள்.
"...மணல்-கல், பனைஓலை காகிதம், ஒலியிழை-ஒளியிழை கணிப்பொறி புத்தகத்தின் அவதாரம் காலந்தோறும் மாறும். வாகனம் வேறு வேறு இலக்கு ஒன்றுதான்:
மானுடம். மானுடம்"
- கவிப்பேரரசு வைரமுத்து
தெய்வங்களைப்போலவே இந்த நண்பர்களையும் பலவாறாய்ப் பிரிக்கலாம். நூல்கள், ஏட்டுச்சுவடிகள், கையெழுத்துப்பிரதிகள், சிடி, டிவிடி, வீடியோ, தேசப் படங்கள், வழிகாட்டிகள், இண்டர்னெட் இப்படியாக எலலாத்துறைகளிலும் எண்ணற்ற அறிவுக்களஞ்சியங்கள்.
புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அன்றாட வழக்கமாக வைத்திருங்கள். ஒவ்வொரு நாளும் ஆகக்குறைந்தது அரைமணி நேரமாவது வாசியுங்கள். ஆனால் ஒருவன் கண்டதையும் கற்கப் பண்டிதனாகிவிடுவதில்லை. உங்கள் மனம் என்னும் தோட்டத்தில் எதனை விதைக்கப்போகிறீர்களோ அது அந்தத் தோட்டத்துக்கு ஒரு சத்துணவாகப் பயன் படவேண்டும். ஆகவே நீங்கள் வாசிக்க எடுத்துச்செல்லும் புத்தகம் உங்களையும் உங்கள் தரத்தையும் முன்னேற்றக் கூடியதாக் இருக்கவேண்டும்.
எவை அப்படியான புத்தகங்கள்? வாழ்க்கையில் வெற்றியடைந்தோரின் வாழ்க்கை வரலாறுகள். இறந்த பின்னரும் இன்றும் இசையாய், கதைகளாய், கவிதையாய், சரித்திரமாய், சுதந்திரமாய் வாழ்ந்து கொண்டிருபோரின் கருத்துக்கள். இவற்றை மீண்டும் மீண்டும் வாசியுங்கள்.
புத்தகங்கள் மானுடத்தின் மறுவடிவம். எந்தவொரு நல்ல புத்தகத்தையும் திறக்கும்போது மானிடத்தின் கதவுகளைத் திறக்கின்றீர்கள்; அதனை நேசிக்கக் கற்றுக் கொள்கிறீர்கள்.