மாண்புற வாழ்க

- ராஜாஜி ராஜகோபாலன்

Saturday, April 18, 2009

உங்கள் தொழில் வாழ்க்கை: மாற்றங்களும் முன்னேற்றங்களும்



இன்றைய பொழுதில் உங்களைச் சுற்றியுள்ள பலர் வேலையிலிருந்து விலக்கப்படுவதைக் கண்டுகொண்டு உங்கள் வேலையில் நீங்கள் பாதுகாப்பாயிருக்கிறீர்களென நம்பிக்கொள்வது மிகக் கடுமையான காரியமாகும்.

நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: நீங்கள் ஒரு போட்டியில் தோற்பீர்களானால் நிச்சயம் ஏமாற்றமடையக்கூடும்; நீங்கள் அதற்குத் துப்பரவாக முயற்சிக்காதுவிட்டீர்களோ உண்மையிலேயே தொலைந்தீர்கள்.

நமது சொந்த வாழ்க்கை போன்று தொழில் துறையிலும் மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. இன்றைய தொழில் துறையில் மாற்றங்கள் அடிக்கடி நிகழும், அதுமட்டுமல்ல சில வேளை பெரியளவில் நிகழும்; எதிர்ப்பாராமலும் நிகழும்.. இது நிச்சயமாக உங்கள் கையில் இல்லை. ஆகவே அவற்றோடு கட்டாயமாக ஒத்துப்போங்கள் அல்லது டைனோஸார் போலச் செத்துப்போங்கள்.

தொழில் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும்போது அவற்றை வெற்றியடைவதற்கு இதோ சில வழிகள்:

• உங்களைச் சுற்றி நடப்பவற்றின்மீது எப்போதும் கண்ணாயிருங்கள். உங்கள் தனிப்பட்ட எண்ணங்கள் உங்கள் பார்வையை மறைக்க இடமளியாதீர்கள்.

• எந்த விஷயத்திலும் ஒருபோதும் உடன் முடிவுக்குவர அவசரப்படாதீகள். கவனமாகச் செவிமடுப்பீர்களானால் உங்களுடன் பேசுபவரின் செல்வாக்கையும் நல்லெண்ணத்தையும் பெற நிறைய வாய்ப்புண்டு.

• கூட வேலைசெய்பவர்களின் நல்ல கருத்துகளுக்கும் தீர்மானங்களுக்கும் ஒப்புதல் கொடுங்கள். அவர்களுக்குத் தேவையான வேளையில் உதவத்தயாராயிருங்கள். அவர்களுக்கு ஆதரவு காட்டுங்கள். அவர்களின் பிழைகளைக் கண்டுகொள்ளாதீர்க்கள்; திறமையப் பாராட்டுங்கள்.

• சில வேளைகளில் மாற்றங்கள் சம்பந்தமாக உங்கள் மனதில் சந்தேகங்களும் கேள்விகளும் எழும்பக்கூடும். இது எப்போதுமே மிகவும் நலமானதோர் சிந்தனைப் போக்கு. ஆனால் உங்கள் சந்தேகம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட செய்தியின்பாற்பட்டதா அல்லது உங்கள் பாரபட்சமான அல்லது ஆழமற்ற சிந்தனையால் ஏற்பட்டதா என்று உங்களையே முதலில் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். அதன் பிறகு சம்பந்தப்பட்டவர்க்களிடம் உங்கள் சந்தேகத்தை அல்லது கேள்வியை எழுப்பி விடைகண்டுகொள்ளுங்கள். நீங்கள் எழுப்புகின்ற ஒவ்வொரு உருப்படியான கேள்வியும் உங்கள் முன்னால் விரிக்கப்படும் செங்கம்பளமாகும்.

• புதிய மாற்றங்களையும் அவற்றின் பலாபலங்களையும் பற்றி அடிக்கடி படித்துக்கொண்டேயிருங்கள். உங்கள் படிப்புக்கு வயதெல்லை கிடையாது; வகுப்பறையில்தான் படிக்கவேண்டுமென்பதில்லை. எங்கும் படிக்கலாம், எதிலும் படிக்கலாம். முக்கியமாக நீங்கள் அன்றாடம் செய்யும் பிழைகளிலிருந்தே நிறையப் படிக்கலாம்.

• எப்போதும் புதியவற்றைக் கேட்டறிவதில் ஆர்வமுள்ளவராயிருங்கள். தங்கள்
அறிவைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறவரிடமிருந்து எவற்றையெல்லாம் அறிந்துகொள்ளமுடியுமோ அவற்றையெல்லாம் அறிந்துகொள்ளப்பாருங்கள்..

• ஆர்வத்துடன் வாசியுங்கள் - புத்தகங்கள், பத்திரிகைகள், இண்டர்னெட் – எதையும்விடாது வாசியுங்கள். முக்கியமான விஷயங்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை அடிக்கடி மீளவாசிப்பதற்கு வசதியான முறையில் கோவை செய்துகொள்ளுங்கள்.

• தொழில் வாழ்க்கையில் உங்கள் விருப்பதிற்கு மாறாக ஏற்படும் திருப்பங்களும் வளைவுகளும் எப்போதுமே தவறானவையாக இருக்கவேண்டுமென எண்ணிக்கோள்ளாதீர்கள். மனிதர்களைப்போன்றே தொழில் நிறுவனங்களும் மாற்றங்களை அனுசரித்துப் போகவேண்டியவையே. அவற்றை அவதானித்து நன்கு அறிந்து விளங்கிக்கொள்வதன் மூலம் நீங்கள் அத்துறையில் "திறமைசாலி" என்ற பெயரைச் சம்பாதிதுக்கொள்ளலாம். அத்துடன் மாற்றங்களை ஏற்படுத்தும் அலுவல்களில் தலைமத்துவத்தை நிரூபிதுக்கொள்ளலாம். இது மாற்றங்களின் மீதான கட்டுப்பாட்டையும் அவற்றை நடைமுறைப்படுத்தும் பணிகளையும் உங்கள் கையில் கொண்டுவர வழி சமைக்கும்.

• புதிய தகவல்களைத் தொடர்ந்து அறிந்துகொள்வதன் மூலம் மற்றவர்களுக்கு உங்களால் வழங்கக்கூடிய உதவிக்கான மூலாதாரங்களை விருத்திசெய்துகொள்ளுங்கள்.

• தமது பதவிகளில் முன்னேறிக் கொண்டிருப்போர்களுடனான உறவை வளர்த்துக்கொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டுங்கள். அவர்கள் அறிந்துள்ள விஷயங்கள் எவையென்பதையும் அவற்றில் உங்களுக்குத் தெரியாதவை எவையெனும் இருப்பின் அவற்றையும் தெரிந்துகொள்வதில் அக்கறை காட்டுங்கள்.

• உங்கள் தொழில் பற்றிய சஞ்சிகைகளில் முக்கியமான கட்டுரைகளை வாசித்தறிந்துகொள்ளுங்கள்.

• பிரச்சனைகளைத் தீர்ப்பவராயிருங்கள்; அவற்றை உண்டாக்கும் ஆளாக உங்களை ஆக்கிக்கொள்ளாதீர்க்கள். பிரச்சனைகளைக் கண்டறிவதற்கே தமது வாழ்வுக்காலத்தை எவரும் செலவளிக்கலாம். அத்துடன் பிரச்சனைகள் எல்லா இடமும் மலிந்து போயிருக்கின்றன. இவற்றைச் சுட்டிக்காட்டுவதையே உங்கள் வேலையாகக்கொண்டால் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களிடமிருந்து மெல்ல மெல்ல விலகத்தொடங்கி விடுவார்கள். அகவே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு விருப்புடையவராயிருங்கள். அத்துடன் அப்படி விருப்பமுள்ளவரெனக் உங்களைக் காட்டிக்கொள்வதிலும் ஆர்வமாயிருங்கள். மேலும் அவற்றைத் தீர்ப்பதற்குரிய நேரத்தையும் தீர்மானியுங்கள். இது உங்களுக்கு "Fixer" என்ற பெயரைச் சம்பாதித்துத் தரும். இத்தகைய ஆள்தான் பதவி உயர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை மறவாதீர்கள்.

• தம்மைப்பற்றி நம்பிக்கையும் பெருமையும் கொள்பவர்கள் நல்ல வேலையாட்களாக இருக்கிறார்கள். மேலும், நகைச்சுவையுணர்வு அவர்களை உடல், மன ரீதியாக லேசாக்கி வேலையில் மாற்றங்களையும் திருப்பங்களையும் வரவேற்கும் தன்மையுடையவர்களாக்குகின்றது.

• தொழில் வாழ்க்கையில் ஒவ்வொரு புதிய நிலைவரம் அல்லது திடீர் மாற்றம் இரண்டு வகையில் நோக்கப்படலாம்: ஒன்று சிக்கல் மற்றது சந்தர்ப்பம். சிக்கலைச் சிக்கலாகவே நீங்கள் கருதுகின்றவரைக்கும் அது தொடர்ந்து அவிழ்க்க முடியாத சிக்கலாகவே இருக்கும். இதற்கு மாறாக,, சிக்கலை உங்களுக்குக் கிடைத்த நல்லதோர் சந்தர்ப்பமாகக் கருதிக் கொள்ளுங்கள்; அதனைத் தீர்க்க உடன் நடவடிக்கை எடுங்கள். உங்களை எதிர் நோக்கும் ஒவ்வொரு சவாலையும் உங்களுடைய புத்தினுட்பத்தையும் எதிர்நீச்சல் போடும் திறமையையும் பரிசோதனை செய்யும் கருவியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

சிலர் மற்றவர்கள்மீது தங்கியிருக்கிறார்கள். இவர்களுடைய திறமை சோதிக்கப்படும்போது "இது என்னுடைய பொறுப்பல்ல" என்று கூறித் தப்பிக்கப்பார்ப்பார்கள். ஆனால் தங்கள்மீதெ தங்கியிருப்பவர்கள் அல்லது தங்கள் திறமைமீது நம்பிக்கையுள்ளவர்கள் "நான் அதைச் செய்து காட்டுவேன், பாருங்கள்” எனத் துணிந்து கூறுவார்கள். இவர்களே இன்றைய உலகத்தை ஆளப்போகிறவர்கள்.

இவர்களுள் நீங்களும் ஒருவராயிருக்கப் பாருங்கள்.

Thursday, April 16, 2009

இன்று புதிய தினம்


இன்று புதிய தினம்
இனி என்றுமே நல்ல தினம்

இறந்த காலத்தில் வாழ
எனக்கினி நேரம் இல்லை
பழைய கவலைகளை எண்ண
எனக்கினிப் பொழுது இல்லை

இன்றிலிருந்து என்
ஒவ்வொரு நினைவும் புதியது
ஒவ்வொரு கணமும் புதியது
ஒவ்வொரு செயலும் புதியது
ஒவ்வொரு சுவடும் புதியது

இது எனது தீர்மானம்
எவரும் சொல்லிச் செய்யவில்லை

எனக்கு நன்றாகவே தெரியும்
இத்தினம் நன்றாகவே அமையும்

இன்று புதிய தினம்
இனி என்றுமே நல்ல தினம்
Courtesy: Ace Troubleshooter

Baseball விளையாட்டின் இறுதியில் Closer என அழைக்கப்படும் கதையை முடிப்பவர் வருவார். பெரும்பாலும் இவர் கையிலேயே இவரது குழுவின் அன்றைய வெற்றி தோல்வி தங்கியிருக்கும். நேற்றைய விளையாட்டில் இவர் செய்த பிழைகளினாலேயே எதிரணி வெற்றியை ஈட்டிக் கொண்டது. ஆனால் இன்று அவர் என்ன சொல்கிறார்?

"அது நேற்றைய கதை. நேற்றைய பிரச்சனைகளும் பிழைகளும் இன்றைய விளையாட்டில் ஆட்சிசெய்ய நான் விடப்போவதில்லை. ஏனெனில் இன்று புதிய தினம்."

நாமெல்லாரும் ஒருவகையில் Baseball ஆட்டக்காரர்கள்தான்; எமது கையில்தான் இன்றைய வெற்றி தோல்வி தங்கியிருகிறது. ஆகவே இவ்வெற்றிக்கான பணிகளை உதயத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். இன்றைய தினம் புதிய தினமாக மலர வேண்டுமானால் இவற்றை முதலில் மனதிலிருத்திக்கொள்ளுங்கள்:

இன்றைய கால நிலையையோ சாலைப் போக்குவரத்தையோ நம்மைச் சுற்றியுள்ளோரின் மன நிலையையோ மாற்றியமைக்கக்கூடிய சக்தி நம்மிடம் இல்லாமலிருக்கலாம். ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்கமைவாக எமது மனப் பக்குவத்தை நிச்சயமாக மாற்றிக் கொள்ளமுடியும். இக் காரியத்தை இத் தினத்தின் ஆரம்பத்திலேயே உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

வாழ்க்கையில் பிழைகளெனக்கருதக் கூடியவாறான எதுவும் கிடையாது. பிழைகள் நாம் கற்கும் பாடங்களாகும். இதுபோன்றே எதிர்மறையான அல்லது தோல்வியெனக் கருதக்கூடிய அனுபவங்களெதுவும் இல்லையென முதலில் உணர்ந்துகொள்ளுங்கள். இவையெல்லாம் உங்கள் வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்கள், வெற்றிக்கான வாசற்படிகள். இதோ ஒரு நண்பரின் கருத்துக்கள்:

இன்றைய தினத்தை எதிர் நோக்கும்போது உங்கள் கனவுகளுக்கு ஆக்கசக்தியைக் கொடுங்கள்; உங்கள் நம்பிக்கைகளைக் கொழுந்துவிட்டெரியச் செய்யுங்கள். இன்றைய தினத்தை ஒரு புதியதினமாக நினைத்துக் கொண்டால் மட்டும் போதாது; புதிய தினமாகக் கருதிச் செயல்படவும் வேண்டும்.

"விரும்பி யாரும் பிறப்பதுமில்லை
விரும்பிய பாத்திரம் கிடைப்பதுமில்லை
புளிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணிச்
சலிக்கும் மனதில் சந்தோசமில்லை;

நாளை என்பதில் நம்பிக்கை வைத்து
இன்று என்பதை எடுத்து நடத்து;

கண்ணீர்த் துளியைக் கழற்றி எடுத்துப்
புன்னகை அணிந்து போரை நடத்து."

நன்றி: கவிப்பேரரசு வைரமுத்து

About Me