மாண்புற வாழ்க

- ராஜாஜி ராஜகோபாலன்

Thursday, April 16, 2009

இன்று புதிய தினம்


இன்று புதிய தினம்
இனி என்றுமே நல்ல தினம்

இறந்த காலத்தில் வாழ
எனக்கினி நேரம் இல்லை
பழைய கவலைகளை எண்ண
எனக்கினிப் பொழுது இல்லை

இன்றிலிருந்து என்
ஒவ்வொரு நினைவும் புதியது
ஒவ்வொரு கணமும் புதியது
ஒவ்வொரு செயலும் புதியது
ஒவ்வொரு சுவடும் புதியது

இது எனது தீர்மானம்
எவரும் சொல்லிச் செய்யவில்லை

எனக்கு நன்றாகவே தெரியும்
இத்தினம் நன்றாகவே அமையும்

இன்று புதிய தினம்
இனி என்றுமே நல்ல தினம்
Courtesy: Ace Troubleshooter

Baseball விளையாட்டின் இறுதியில் Closer என அழைக்கப்படும் கதையை முடிப்பவர் வருவார். பெரும்பாலும் இவர் கையிலேயே இவரது குழுவின் அன்றைய வெற்றி தோல்வி தங்கியிருக்கும். நேற்றைய விளையாட்டில் இவர் செய்த பிழைகளினாலேயே எதிரணி வெற்றியை ஈட்டிக் கொண்டது. ஆனால் இன்று அவர் என்ன சொல்கிறார்?

"அது நேற்றைய கதை. நேற்றைய பிரச்சனைகளும் பிழைகளும் இன்றைய விளையாட்டில் ஆட்சிசெய்ய நான் விடப்போவதில்லை. ஏனெனில் இன்று புதிய தினம்."

நாமெல்லாரும் ஒருவகையில் Baseball ஆட்டக்காரர்கள்தான்; எமது கையில்தான் இன்றைய வெற்றி தோல்வி தங்கியிருகிறது. ஆகவே இவ்வெற்றிக்கான பணிகளை உதயத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். இன்றைய தினம் புதிய தினமாக மலர வேண்டுமானால் இவற்றை முதலில் மனதிலிருத்திக்கொள்ளுங்கள்:

இன்றைய கால நிலையையோ சாலைப் போக்குவரத்தையோ நம்மைச் சுற்றியுள்ளோரின் மன நிலையையோ மாற்றியமைக்கக்கூடிய சக்தி நம்மிடம் இல்லாமலிருக்கலாம். ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்கமைவாக எமது மனப் பக்குவத்தை நிச்சயமாக மாற்றிக் கொள்ளமுடியும். இக் காரியத்தை இத் தினத்தின் ஆரம்பத்திலேயே உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

வாழ்க்கையில் பிழைகளெனக்கருதக் கூடியவாறான எதுவும் கிடையாது. பிழைகள் நாம் கற்கும் பாடங்களாகும். இதுபோன்றே எதிர்மறையான அல்லது தோல்வியெனக் கருதக்கூடிய அனுபவங்களெதுவும் இல்லையென முதலில் உணர்ந்துகொள்ளுங்கள். இவையெல்லாம் உங்கள் வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்கள், வெற்றிக்கான வாசற்படிகள். இதோ ஒரு நண்பரின் கருத்துக்கள்:

இன்றைய தினத்தை எதிர் நோக்கும்போது உங்கள் கனவுகளுக்கு ஆக்கசக்தியைக் கொடுங்கள்; உங்கள் நம்பிக்கைகளைக் கொழுந்துவிட்டெரியச் செய்யுங்கள். இன்றைய தினத்தை ஒரு புதியதினமாக நினைத்துக் கொண்டால் மட்டும் போதாது; புதிய தினமாகக் கருதிச் செயல்படவும் வேண்டும்.

"விரும்பி யாரும் பிறப்பதுமில்லை
விரும்பிய பாத்திரம் கிடைப்பதுமில்லை
புளிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணிச்
சலிக்கும் மனதில் சந்தோசமில்லை;

நாளை என்பதில் நம்பிக்கை வைத்து
இன்று என்பதை எடுத்து நடத்து;

கண்ணீர்த் துளியைக் கழற்றி எடுத்துப்
புன்னகை அணிந்து போரை நடத்து."

நன்றி: கவிப்பேரரசு வைரமுத்து

No comments:

About Me